ஐபிஎல் 2025 : கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 30 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில்,முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, பஞ்சாபின் தொடக்க வீரர்களாக ப்ரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களம் இறங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா 22 ரன், ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

 

 

இதையடுத்து களம் புகுந்த ஸ்ரேயாஸ் ஐயர் ரன் எடுக்காமலும், ஜோஷ் இங்கிலிஸ் 2 ரன்னிலும், நேஹல் வதேரா 10 ரன்னிலும், மேக்ஸ்வெல் 7 ரன்னிலும், இம்பேக்ட் வீரராக களம் புகுந்த சூர்யாஷ் ஷெட்ஜே 4 ரன்னிலும், மார்கோ ஜான்சென் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து ஷஷாங் சிங் மற்றும் பார்ட்லெட் ஜோடி சேர்ந்தனர். இதில் ஷஷாங் சிங் 18 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்த 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. இதில், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குவிண்டன் டிகாக் 2 ரன்களிலும், சுனில் நரேன் 5 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இதில் சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேக்ஸ்வெல் பந்துவீச்சில் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதற்கிடையில் ஆண்ட்ரே ரஸல் 2 சிக்ஸர்களையும், 1 பவுண்டரியையும் பறக்கவிட்டு கொல்கத்தா அணிக்கு சற்று நம்பிக்கை அளித்தார். இறுதியில் மார்க்கோ ஜான்சன் வீசிய பந்தில் ரஸல் போல்ட் ஆனார். இதையடுத்து கொல்கத்தா அணி 15.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *