அதிமுக: ஒற்றுமை அவசியம் – எதிர்கட்சியாக உறுதியாக நிலைப்பிடிக்க வேண்டிய நேரம்!

 

கடந்த நான்கு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது, அதிமுகவின் எதிர்காலம் தொடர்பான விவகாரம். நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை நடத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கொங்கு மண்டலத்தின் முக்கிய அதிமுக தலைவர், முன்னாள் அமைச்சர், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கே. எ. செங்கோட்டையன், “என்னை சோதிக்காதீர்கள், நான் எம்ஜிஆரும் ஜெயலலிதா மீது அன்பு செலுத்தியவன்” என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் கட்சியின் நீண்ட கால வழிபயணத்தை நினைவுபடுத்த முயன்றுள்ளார்.

இதேவேளை, எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாமல் அத்திக்கடவு-அவிநாசி திட்ட பாராட்டு விழா நடத்தி இருப்பது, அதிமுகவில் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதன் காரணமாக, கட்சி தொண்டர்களிடையே கருத்து வேறுபாடுகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக கடந்த காலங்களில் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டால் பலமாக இருந்தது. எம்ஜிஆரும், கலைஞரும் அரசியலில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியாக ஒரே நேரத்தில் உரிய தாக்கத்தை செலுத்தியதால், தமிழகத்தில் தேசிய கட்சிகள் பரவ முடியாமல் இருந்தன. இதேபோல், ஜெயலலிதா – ஸ்டாலின் இடையே இருந்த அரசியல் போட்டியும் தமிழக மக்களுக்கு பல நன்மைகளை வழங்கியது.

இந்நிலையில், தற்போது அதிமுக எதிர்க்கட்சியாக உறுதியாக செயல்படாமல், மௌனமாக இருக்கிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இதன் காரணமாக, கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலில் பங்கேற்காதது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால், கட்சி பாஜகவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு விடுமோ என்ற சந்தேகம் தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

கே. எ. செங்கோட்டையன் மேடையில், “அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தி கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர், சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது என மறைமுகமாக தெரிவித்திருக்கிறார்.

மொத்தத்தில், அதிமுக வலிமையாக இருக்க, ஒற்றுமை தேவை. எதிர்க்கட்சியாக கட்சி உறுதியாக செயல்பட்டால், தமிழக அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதற்காக, கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இரண்டாம் கட்ட தலைவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், கட்சியின் எதிர்காலம் பெரிய சவாலாக மாறலாம்.

-சரஸ்வதி தாசன்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *