கடந்த 2011- 2015ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதற்கிடையில் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை கைது செய்ததது. பின்பு அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை கைதியாக சிறையில் இருந்த அவருக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர், மின்சாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்திருந்த வழக்கு இன்று (ஜன.27) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கு தொடர்பான பெண் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட டிஜிட்டல் வழக்கு ஆவணங்களின் நகல்களை தங்களுக்கு வழங்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் கேட்டிருப்பதாகவும் அதுவரை, வழக்கில் சாட்சியாக உள்ள தடய அறிவியல் துறையின் கணிணிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி, தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை தவிர்த்து விட்டு, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு அனுமதியளித்த நீதிபதி கார்த்திகேயன், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 6 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Leave a Reply