கவிஞர் தமிழ் ஒளி 1960இல் எழுதிய கவிதையை மீண்டும் நினைவூட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்!

இந்தி எதிர்ப்பு போர்

சிந்திய இரத்தம் உலரவில்லை எங்கள் செந்தமிழ் வாழ்வு மலரவில்லை! இந்தியை இங்கே அழைக்கின்றீர்கள்! கூர் ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்!
தொளைபட்ட புண்கள் மறையவில்லை – எங்கள் சுதந்திர எண்ணம் நிறையவில்லை! நுளைபட்ட இந்திக்குப் பூமாலையா? – நாங்கள் நோற்ற தவத்திற்குச் சாவோலையா?
கார்இருள் இன்றும் விடியவில்லை -எம் காற்றளை இன்றும் ஒடியவில்லை! தேர்மிசை இந்தி உயர்குவதோ?-எங்கள் செந்தமிழ் அன்னை அயர்குவதோ?
எக்காளம் கொண்டிங்கே ஊதுகிறோம் – போர் என்றென வீரர்கள் மோதுகிறார்! தெக்காணம் எங்கும் எதிர்ப்பொலிகேள் – இதோ தென்றமிழ் விடுதலை பெற்றிடும் நாள்!
நேற்றுப் பிறந்தோர் இந்திமொழி – நம் நேரினில் நின்றே உருட்டும்விழி
கூற்றை எதிர்த்து வளர்ந்தநமை – ஒரு கூகை எதிர்ப்பது தான்புதுமை! சங்கம் அமர்ந்தது கற்பனையோ? – எங்கள் தன்மானம் இன்றைக்கு விற்பனையோ? அங்கம் பதறுது தோழர்களே – போர் அணிகொண் டெழுவீர் வீரர்களே!
சுண்டைக்காய் நாடுகள் வாழ்கின்றன – நின் தோள்கள் அடிமைக்குத் தாழ்கின்றன! கண்டதுண்டோ இவ்வர லாற்றினை? – இரு கண்பெற்றும் குருடெனஏன் மாற்றினை?
முத்தமிழ் மன்னர்கள் சோறளித்தார் -நம் மூதாதை மாந்தர்க்கு வீறளித்தார்! சித்தத்திற் பொங்கும் நெருப்பளித்தார் – நம் செந்தமிழ் ஓங்கும் விருப்பளித்தார்!
ஓடும் குருதியில் கொப்புளிக்கும் – அணு ஒவ்வொன்றும் தமிழ்என்று தான் ஒலிக்கும்! ஏடு திறந்திடும் பார்; தரணி!- இதோ எழுதுவீர் இன்றைக்கே போர்ப்பரணி!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *