திமுக எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சர் #MKStalin தலைமையில் தொடங்கியது!

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் இன்று (ஜன. 29) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29-1-2025 புதன்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம் ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அப்போது, திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பொருள் : மத்திய அரசின் 2025-26ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கிறது. இதில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நடைபெறவுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் ஆட்சியில் 3வது முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக பிப். 1ம் தேதி 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, ஜன. 31 முதல் பிப். 13 வரையும், 2ம் கட்டமாக மார்ச் 2வது வாரம் முதல், ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *