சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள், மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், இளைஞர்கள் பெண்கள் பயணித்த காரை சுற்றுவளைத்து தகராறில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.
பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை துரத்தியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் 5 தனிப்படைகள் அமைத்து இளைஞர்களை தேடி வருகின்றனர். மேலும், ஈசிஆர் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாக தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். போலீசார் பெண்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை துரத்திச் சென்ற இளைஞர்களின் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply